Thursday, December 16, 2021

தனுர்தரோ தனுர்வேதோ

த4னுர்த4ரோ த4னுர்வேதோ3 த3ண்டோ3 த3மயிதா த3ம: | 
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம: || 


தனுர்தர: - புகல் நாடும் உயிர்களுக்குப் பகையானவற்றின் மீது தாமே சினந்து பொருகின்ற வில்லைத் தரிப்பவராக என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தனுர்தரர் என்று போற்றப்படுகிறார். 

தனுர்வேத: - உயிர்களை நலியும் பகை கடிந்து காக்க ஏந்திய வில்லே அந்த வில்லின் வித்தை வடிவாக இருக்கும்படியானவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தநுர்வேதர் என்று போற்றப் படுகிறார். 

தண்ட: - உயிர்கள் நல்வழியில் உய்வு அடைய ஏற்றவகையில் நெறிப்படுத்தி ஆளும் அரசனது செங்கோல், ஆட்சியின் நல்லாணையையும், நன்னெறியில் செலுத்தும் ஆற்றலையும் உருவகப்படுத்தி நிற்பதால் அந்தச் செங்கோல் ஆகிய தண்டமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகையாலே அவர் தண்டர் என்று அறியப் படுகிறார். 

தமயிதா - நன்னெறியில் உய்க்கும் அரச தத்துவமாக மட்டுமின்றி, தீநெறியில் செல்வதைத் தடுக்கும் அடக்கும் திறல் வடிவாகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமயிதா என்று சொல்லப்படுகிறார். 

(அ)தம: - உய்த்தும் உறுத்தும் செய்த அடங்கிய தகைமையாகவும் அவரே இருப்பதாலும், தாம் எதனாலும் அடக்க இயலாத சுதந்திரம் கொண்டவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமர் என்றும் அதமர் என்றும் சொல்லப்படுகிறார்.

[கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்/ ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்} 

அபராஜித: - எந்த ஒன்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையானும், உள்ளிலும், புறத்திலும் எதை மீற முடியாதோ, அது ஆக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அபராஜிதர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வஸஹ: - மிக்குயர்ந்தவர் முதல் மிகவும் கீழ்நிலையுற்றவர்வரை அனைவரும் தம்மை ஏற்றித் தொழுது நற்கதி அடையும்வண்ணம் அனைவரையும், அனைத்து தெய்வங்களையும் தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வஸஹர் என்று சொல்லப்படுகிறார். 

நியந்தா - அனைவரையும் அவரவர் நிலை, பக்குவம், நிச்சயம் என்ற அடிப்படையில் இயக்கி, முடிவில் தம்மை அடைவதாகிய பெருநிலையை நோக்கி முன்னேறுமாறு நடத்துபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியந்தா என்று அழைக்கப்படுகிறார். 

நியம: - ஒவ்வொரு உயிரும் வேண்டும் பலன்களை அவரவர் தெய்வங்களின் மூலமாக அவர்களுக்கு முறையாகத் தருபவரும், தம்மையே புகலடைந்தவருக்கு எவ்வித நியமமுமின்றி மிக்குயர்ந்த பலனைத் தருபவருமாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியம: (அநியம:) என்று சொல்லப்படுகிறார். 

யம: - வாழ்க்கை, மரணம், தோற்றம், கேடு, படைப்பு, ஒடுக்கம் என்று அனைத்து காரியங்களுக்குமான அதிகாரி தேவதைகளை உண்டாக்கி, வழிநடத்துபவர் ஆகையாலே மரணமற்றவர் என்று அயம: என்றும், மரணத்தையும் நடத்துபவர் அவர் ஆகையால் யம: என்றும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அழைக்கப்படுகிறார். 

***

No comments:

Post a Comment