Thursday, December 16, 2021

பாரப்ருத் கதிதோ யோகீ

பா4ரப்4ருத் கதி2தோ யோகீ3 யோகீ3: ஸர்வகாமத3: | 
ச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || 


பாரப்ருத் - ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட நிலையில் அவர்கள் அறியாமையால் விளைந்த தம் கர்மத் தளைகளினின்றும் விடுபட்டுத் தாங்கள் அடைய வேண்டிய பெரும் பேறான பரமாத்மாவாகிய தம்மை அடைவதாகிற மகத்தான பொறுப்பை யார் கையிலும் ஒப்படைத்துவிடாமல் தாம் ஒருவரே முழுவதும் சுமப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பாரப்ருத் என்று போற்றப்படுகிறார். 

கதித: - போற்றப்பட்டிருப்பவர் 

( வேதங்கள் அனைத்தாலும் ஒரே பரம்பொருள் தத்வம் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறவர், வேதப் பொருளை விளக்கும் அனைத்து இதிகாச புராண, துணை நூல்கள் அனைத்தாலும் உயர்வற உயர்ந்த பரம்பொருள் என்று மூதலித்துக் காட்டிக் கொண்டாடப்படுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கதிதர் என்று சொல்லப்படுகிறார்.

குறிப்பு: - இந்த நாமத்திற்கு வெறுமனே ’புகழப்பட்டவர்’ என்று அர்த்தம் சொல்லிவிட்டுப் போய்விடலாம். குறிப்பாக உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள் என்றெல்லாம் ஆதாரங்கள் காட்டிப் பரக்க எழுத வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் பராசர பட்டர் எழுதினாலாவது சொல்லலாம் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகையாலே எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்குத் தம் விருப்பக் கடவுளைப் புகழ்கிறார் என்று. ஆனால் பராசர பட்டர் எழுதியதை விட இரண்டு மடங்கு நீளமாக இந்தத் திருநாமத்திற்கு எழுதியிருப்பவர் பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர்.

அவர் தமது அத்வைத ரீதியாக ஏதாவது அர்த்தம் எழுதினால் யாரும் கேட்பாரில்லை. அது இயல்பாகவும் இருக்கும். அல்லது பிற்காலத்தில் அவரைப் பற்றிப் பரப்புரைகள் எழுந்தது போல் அவர் ஆறு மதங்களை நாட்டியவர் என்றால் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தமாக ஆறு மதங்களிலும் அவரவர் கடவுளாகக் கொண்டாடப் படுபவர் என்று சொல்லியிருந்தாலும் யாரும் கேட்க முடியாது.

ஆனால் அவ்வாறெல்லாம் ஸ்ரீஆதிசங்கரர் எழுதாமல் வேத வேதாந்தங்களாலும், இதிகாச புராணாதிகளாலும் புகல் என்று முடிவு கட்டப்பட்ட உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள், பரதெய்வம் என்பது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்று இந்த நாமத்தில் திட்டவட்டமாக எழுதுகிறார். காரணம் அவர் மட்டுமன்று, அவர் நாளில் வேத வேதாந்தங்களையும், இதிகாச புராணங்களையும் சான்று நூல்களாகக் கொண்ட வைதிகர்கள் யாவருமே உயர்ந்த ஈசுவர தத்வம் என்றால் அது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதையே இஃது காட்டுகிறது.

இந்த நாமத்தில் மட்டுமன்று. பல நாமங்களிலும் பராசர பட்டரே சாதாரணமாகப் பொதுப் பொருள் எழுதும் இடத்தில் எல்லாம் கூட ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள் மிக விரிவாக ஆணித்தரமாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஒப்புயர்வற்ற உயர்வை எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வந்தோரால் ஓரொரு கால அவசியத்தை முன்னிட்டு நிலைப்பாடுகள் மாற்றம் கண்டிருக்கலாம். அவற்றைத் தவறு என்று சொல்வதற்கில்லை. பல வேறு மக்களின் ஈடுபாடுகளை உள்வாங்கச் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே. ஆயினும் உண்மை நிலை ஆதிசங்கரரின் காலத்திய அவருடைய கொள்கையின் நிலைப்பாடு என்ன என்பதையும் நாம் ஒருபக்கத்தில் தெரிந்து வைத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தத் திருநாமத்திற்கான ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் வரிகள்:

வேதாதிபி: அயம் ஏவ பரத்வேந கதித:, ஸர்வை: வேதை: கதித இதி வா கதித:, ’ஸர்வே வேதா; யத் பதம் ஆமநந்தி’, ‘வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய’, ’வேதே ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப | ஆதௌ மத்யே ததா சாந்தே விஷ்ணு: ஸர்வத்ர கீயதே’ இதி ச்ருதி ஸ்ம்ருத்யாதி வசநேப்ய:, ’ஸோSத்வந: பாரமாப்நோதி தத்விஷ்ணோ: பரமம் பதம்’ இத்யாத்யுக்தம், கிம் ததத்வநோ விஷ்ணோர்வ்யாபநசீலஸ்ய பரமம் பதம் ஸ தத்வமித்யாகாங்க்ஷ்யாம் இந்த்ரியாதிப்ய: ஸர்வேப்ய: பரத்வேந ப்ரதிபாத்யதே ‘இந்த்ரியேப்ய; பராஹ்யர்த்தா:’ இத்யாரப்ய, ’புருஷாந் ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பராகதி:’ இத்யந்தேந ய: கதித: ஸ: கதித: ) 

யோகீ - எப்பொழுதும் தத்வ ஞானத்தால் பார்க்கப்படுபவராய்க் கூடாதவற்றைக் கூட்டும் பரமகாரணராய் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகி என்று அழைக்கப்படுகிறார் 

யோகீச: - யோகிகளுக்கும் யோகத்தைக் கைக்கூடச் செய்பவராய், நித்திய இயல்பான யோகம் வாய்த்தவர்களுக்கும் அவர்களது யோகம் நிலைக்கும் காரணமாய் அமைந்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகீசர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வகாமத: - அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவது என்பது தம்முடைய அருளின் வசமாக நடக்கும் வண்ணம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வகாமதர் என்று சொல்லப்படுகிறார். 

ஆச்ரம: - ஸம்ஸாரத்தில் ஒரு கணமும் ஓய்வில்லாமல் அலைவுறும் உயிர்கள் கடைசியாக அடைந்து பட்ட சிரமம் எல்லாம் தீர்ந்து இளைப்பாறும் நிரந்தர ஓய்விடமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆச்ரமர் என்று அழைக்கப் படுகிறார். 

ச்ரமண: - அனைத்துயிருக்கும் புகலாகத் தாமே இருப்பினும், தம்மை அவ்வண்ணம் உணரும்வரை அதற்கேற்ற பக்குவம் பெறுவதற்காகத் தன்முனைப்புடன் கூடிய தேட்டத்தில் மூட்டிப் பயிற்றுபவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ச்ரமணர் என்று சொல்லப்படுகிறார். 

க்ஷாம: - அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம்மை நோக்கிய தேட்டத்தில் தம்மால் முடிக்கிவிடப்பட்டு முனைந்தோர்தம் கர்ம பலன்கள் அவர்களைத் தகையும்போதும், அவர்களுடைய கடுமையான தவ வாழ்க்கையிலும் அவர்களுக்குப் போதிய பொறையும், விடாமுனைப்பும் தந்தருளுபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையாலே அவர் க்ஷாமர் என்று போற்றப்படுகிறார். 

ஸுபர்ண: - பக்குவம் அடைந்து வருவோரை அடுத்த அடுத்த நிலைக்கும், தன்னையே புகலும், வழியும் என்று உணரும் பக்குவம் அடைந்தோரைப் பரமப் பிராப்யமான நிலைக்கும் சம்ஸார மண்டலத்தின் எவ்வித நலிவும் வாட்டாமல் கடத்திச் செல்லும் ஒரு நல் துணையாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுபர்ணர் என்று சொல்லப்படுகிறார். 

வாயுவாஹந: - தாம் எவ்வளவு கருணையோடு அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக அணைத்து எடுத்துச் சென்றாலும், ஜீவர்கள் தம் சுதந்திர இச்சையால் அவருடைய காப்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டு, கீழே விழுவதற்கே வாய்ப்பு பார்த்து விழும் போதும், அவற்றின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, விழ விட்டு, அவை விழுந்த வேகமாகிய வாயுவே வாஹனமாக அவற்றைத் தம் பால் கொண்டு வந்து சேர்க்கும்படி அமைத்து வைத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாயுவாஹநர் என்று போற்றப்படுகிறார். 

***

No comments:

Post a Comment