Thursday, December 16, 2021

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ

உத்3ப4வ: ஸுந்த3ர: ஸுந்தோ3 ரத்நநாப4ஸ் ஸுலோசந: | 
அர்கோ வாஜஸநிச் ச்ருங்கீ3 ஜயந்த: ஸர்வ விஜ்ஜயீ || 


உத்பவ: - அவருடைய பிறப்புகள் கர்மத்தின் காரணமாக இன்றி, கருணையின் காரணமாக இருப்பதால் மிகச் சிறந்தவை. அவ்வாறு சிறந்த அவதாரங்களைச் செய்பவர் ஆகையாலே அவர் உத்பவர் ஆகிறார் 

ஸுந்தர: - மன்னுயிர்க்காக, மன்னுயிர் காக்க அவதரிக்கும் கருணை மிகுந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர், பேரழகு மயமாகவும் திகழ்கிறார் என்பதால் அவருடைய திருநாமம் ஸுந்தர: என்று சொல்லப்படுகிறது 

ஸுந்த: - பேரழகு என்பதனோடு சேர்த்து பெருந் தயையே வடிவானவர் ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதால் அவர் ஸுந்த: என்று சொல்லப் படுகிறார் 

ரத்ந நாப: - தயையே உருவானவர் ஆகையால் உலகத்தைப் படைத்து, உயிர்கள் வீடு பேற்றிற்கு முன்னேறுவதற்காக, முதன்முன்னம் உலகைப் படைக்க என்று பிரமனைப் படைத்து, அதற்கு முன்னர் பிரமனுக்கு இருப்பிடமான நாபி கமலத்தை வெளியிட்ட அருஞ்செல்வம் அன்ன ரத்நம் போன்ற நாபியை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ரத்ந நாப: என்று சொல்லப் படுகிறார். 

ஸுலோசந: - லோசநம் என்பது காண்பது என்னும் பொருளில் கண்ணையும், ஞானத்தையும் குறிப்பதால் நன்கு அழகிய திருக்கண்களையும், செம்மையான அக அழகு பொலியும் ஞானத்தையும் உடையவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுலோசந: என்று அழைக்கப் படுகிறார் 

அர்க: - மிகப்பெரும் தெய்வங்களாலும் துதிக்கப்படுபவர் ஆகையாலே துதி என்பதற்கு இலக்காக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அர்க: என்று அழைக்கப் படுகிறார். 

வாஜஸநி: - உணவை உண்மையில் பிரம்மம் என்று அறிய வேண்டும் என்னும் மறைமொழிக்கு இணங்க, அனைத்து உயிர்க்கும் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவாகவும், அதற்கு உரிய பசியினால் வேண்டித் தவிப்பவர்க்கு அவ்வுணவை அளிப்பவராகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாஜஸநி என்று சொல்லப்படுகிறார் 

ச்ருங்கீ - பிரளயகாலத்தில் ஒற்றைக் கொம்புள்ள மீனுரு எடுத்து உயிர்களை அடுத்த படைப்பு வரையில் பாதுகாத்தான் ஆகையாலே ச்ருங்கீ. கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து உயிர்களைக் காத்தான் ஆகையாலே ச்ருங்கீ. 

(நம்மாழ்வார் - 

மீனென்னும் கம்பில்
வெறியென்னும் வெள்ளிவேய்
வான் என்னும் கேடில்லா
வான் குடைக்கு
தான் ஓர்
மணிக்காம்பு போல்
நிமிர்ந்து மண்ணளந்தான்
நங்கள் பிணிக்காம்
பெரு மருந்து பின்.) 

ஜயந்த: - நமக்கான பகைவர்களை ஜயிப்பதில் தவறாதவர், முக்கியமாக நமக்காக நம் அகங்காரத்தை ஜயித்து நம்மை ஆட்கொள்ள வல்லவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஜயந்தர் என்று சொல்லப் படுகிறார் 

( திருமழிசையாழ்வார்;

அன்பாவாய்
ஆரமுதம் ஆவாய்
அடியேனுக்கு இன்பு ஆவாய்
எல்லாமும் நீ ஆவாய்
பொன்பாவை கேள்வா!
கிளரொளி என் கேசவனே!
கேடின்றி ஆள்வாய்க்கு
அடியேன் நான்
ஆளே.) 

ஸர்வவித் ஜயீ - எல்லாம் தெரிந்தவர்களையும் ஜயிப்பவர், அனைத்து அறிவின் வழிகளிலும் ஜயிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவித்ஜயீ என்னப்படுகிறார். 

( நம்மாழ்வார்:

வாசகம் செய்வது நம் பரமே?
தொல்லை வானவர் தம் நாயகன்
நாயகர் எல்லாம் தொழுமவன்
ஞாலமுற்றும் வேயகம் ஆயினும்
சோராவகை
இரண்டே அடியால் தாயவன்
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
நம் இறையே.) 

***


No comments:

Post a Comment