Thursday, December 16, 2021

அக்ரூரோ பேசலோ தக்ஷோ

அக்ரூர: பேலோ த3க்ஷோ த3க்ஷிண: க்ஷமிணாம் வர: | 
வித்3வத்தமோ வீதப4ய: புண்யச்ரவண கீர்த்தன: || 


அக்ரூர: - தாம் பக்தர்களைக் காக்கும் போதும், சாதுக்களை நலியும் தீய சக்திகளை அழிக்கும் போதும் ஒரே படித்தாக அன்பே அன்றிக் கொடிய தன்மை சிறிதும் இல்லாதவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரூரர் எனப்படுகிறார். 

பேசல: - எவ்வளவு விரைவாகச் செயல் புரிந்தாலும், என்ன பேசினாலும், எந்நிலையிலும் பூரண அழகு மிளிரும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பேசல: என்று சொல்லப்படுகிறார். 

தக்ஷ: - தம்முடைய பூரண அமைதியும், நிறைந்த அழகும் சிறிதும் நலுங்காமல் இருந்தாலும் அவருடைய செயல்கள் மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும், தவறாமலும் இருக்கும்படியான காரியத் திறன் அவரிடம் நிறைந்து காணப் பெறுவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தக்ஷ: என்று போற்றப்படுகிறார். 

தக்ஷிண: - காரியத் திறமையும், செயல் விரைவும் பூரணமாகத் துலங்குகிறவர் என்றாலும் தாம் தம்மைச் சரணடைந்த ஜீவர்களுக்குத் தமக்குத் திருப்தியாகப் போதிய அளவு செய்யவில்லையே என்ற ஆற்றாமையைக் கொண்டவர் என்பதால் அடியவர்களின் மிக்க உள்ள நெகிழ்வுக்குக் காரணம் ஆகிறார் என்பதால் அவர் தக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

க்ஷமிணாம்வர: - பொறுமையில் சிறந்த பூமியையும் தாம் தாங்குபவர் என்பதால் பொறுமையினும் பொறுமை மிக்கவர் எனவே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ஷமிணாம்வர: என்று சொல்லப்படுகிறார். 

வித்வத்தம: - அறிவில் எல்லாம் மிக்க அறிவாகவும், அறிபவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வித்வத்தம: என்று போற்றப்படுகிறார். 

வீதபய: - அறிவும் அறிவோனும் அவரே ஆக இருப்பதால் அவருக்கு அந்நியமாக ஒன்று இல்லாமையால் பயம் என்ற ஒன்று இல்லாதவர் என்பதாலும் தம்மைப் புகலடைந்தோருக்குத் தம்மைப் பற்றிய நினைவாலேயே பயத்தை இல்லாமல் செய்பவராகவும் இருப்பதால் வீதபய:

புண்யச்ரவணகீர்த்தந: - தம்மைப் பற்றிய சரித்திரங்களையும், புகழ்த்துதிகளையும் கேட்பதனாலேயே ஜீவர்களின் அசுபங்கள் நீங்கவும், அவ்வாறு கேட்பதுவே மிகவும் பெரிய புண்ணியமாக அமைந்தவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்யச்ரவணகீர்த்தந: என்று போற்றப்படுகிறார். 

***



No comments:

Post a Comment