Thursday, December 16, 2021

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ:

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஜிஹ்வ: ஸப்தைதா4: ஸப்தவாஹன:| 
அமூர்த்தி: அநக4: அசிந்த்ய: ப4யக்ருத்3 ப4யநான: || 


ஸஹஸ்ரார்ச்சி: - ஒளியும், வெப்பமும் கொண்டு உலகில் பரிணாமங்களைச் செய்வதான ஆயிரம்விதமான ஒளிகள் தம்மிடமிருந்து வெளிப்போந்து திகழ இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸஹஸ்ரார்ச்சி; என்று அழைக்கப்படுகிறார். 

[ பேய்க்கும் ஒரு பேய் போன்று
பித்து ஆய்த் திரிவோர்க்கும்,
வேய்க்கும்,
அணிமுத்திவரும் வேங்கடமே
வாய்க்கு அமுது ஊர்
வண்மைப்பேர் ஆயிரம் தான் மன்னினான்,
மாவலிபால்
தண்மைப் பேராய் இரந்தான்
சார்பு.

(திருவேங்கடமாலை, ஸ்ரீபிள்ளைப் பெருமாள் ஐயங்கார்) ] 

ஸப்த ஜிஹ்வ: - ஏழு நாக்குகள் கொண்டதாகச் சொல்லப்படும் அக்னி தம் உருவமாக, அந்த அக்னியைத் தம் வாயாகக் கொண்டு அனைத்து மக்களின் ஆஹுதிகளையும் புசிப்பவராகவும், எங்கெங்கு அக்னி உண்டோ அவையெல்லாம் தம் உருவம் என்றும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தஜிஹ்வர் எனப்படுகிறார். 

ஸப்தைதா: - ஏழு விதச் சிறப்புகள், ஏழுவித வேள்விகள் என்று பிரபஞ்சத்தையே ஏழுவித உருவமாகத்தாம் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தைதா: என்று அழைக்கப்படுகிறார். 

ஸப்தவாஹந: - ஏழு சந்தஸ்ஸுகளுக்கும் தேவதைகளாக ஏழு குதிரைகளால் பூட்டிய தேரில் வலம் வருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தவாஹநர் என்னப்படுகிறார். 

அமூர்த்தி: - உலகில் காண்கின்ற வகையில் இல்லாத தெய்விகமான மேனி உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அமூர்த்தி என்று அழைக்கப் படுகிறார். 

அநக: - உலகில் கர்மங்கள் காரணமாகப் பிறந்து தன்னுடைய ஞானம் சுருக்கமும், பின்னர் அருளால் இயல்பான விரிவும் அடைய நேரும் ஜீவனைப் போல் இன்றி, அந்த ஜீவர்களைக் கரையேற்றத் தாம் கருணையினால் எத்தனை பிறவிகள் எடுப்பினும் சிறிதும் மாற்றமோ, மழுங்கலோ தன்பால் அண்டாத பூரண நல்ஞானம் என்றுமே உடையவரும், அதனால் ஜீவர்களின் ஞானக் கேடுகளைக் களைந்து உய்வு தரவும் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநகர் என்று அழைக்கப்படுகிறார். 

அசிந்த்ய: - உலகில் காணும் இயல்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருப்பவர் ஆகையாலே இத்தகையவர் என்று சிந்தனையின் மூலம் அறுதியிட்டு அறிய முடியாதவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அசிந்த்யர் என்று சொல்லப் படுகிறார். 

பயக்ருத் - தீவழிச் செல்வோருக்குப் பயத்தை உண்டாக்குகிறவராக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயக்ருத் என்று அழைக்கப் படுகிறார். 

பயநாசன: - நல்வழியில் நடப்போர்க்குப் பயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அழிக்கும் காப்பாக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயநாசநர் என்று அழைக்கப் படுகிறார். 

*** 

No comments:

Post a Comment