Thursday, December 16, 2021

அணுர்ப்ருஹத் க்ருச:

அணுர் ப்3ருஹத் க்ரு: ஸ்தூ2ல: கு3ணப்4ருந் நிர்கு3ணோ மஹாந் | 
அத்4ருத: ஸ்வத்4ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்3வம்சோ வம்வர்த4ந: || 


அணு: - இருக்கின்ற ஆகாசங்களிலெல்லாம் மிகச்சிறிய ஆகாசமான ஹ்ருதய ஆகாசத்தினுள்ளும் புகுந்து, அதில் அணுஸ்வரூபன் என்று சொல்லப்பட்ட ஜீவனின் உள்ளும் அந்தர்யாமியாய் நின்று காக்கும், அணிமா என்னும் திறல்வல்லோன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அணு என்றே அழைக்கப் படுகிறார். 

ப்ருஹத் - பெரிதினும் பெரிதான பரமபதத்தையும் தம் திருமேனியில் ஒரு பகுதியாக அடங்கும்படியாக மிகப் பெரியவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ருஹத் என்ரு அழைக்கப்படுகிறார். 

க்ருச: - காற்றினும் லேசானவர் ஆகையாலே எங்கும் பரவி நிற்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ருசர் என்று சொல்லப் படுகிறார். 

ஸ்தூல: - இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நேரடியாகத் தொட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு பருத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்தூலர் எனப்படுகிறார். 

குணப்ருத் - அனைத்துப் பொருட்களையும், அவற்றின் தன்மைகள் அனைத்தையும் தாம் தம் குணம் போலத் தாங்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குணப்ருத் என்று சொல்லப் படுகிறார். 

நிர்குண: - நற்குணங்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவர், தாம் எவ்வித குணதோஷங்களும் அற்றவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நிர்குணர் எனப்படுகிறார். 

மஹாந் - தோஷம் கலவாத குணங்களே நிறைந்தவர் ஆகையாலே என்றும், யாவருக்கும், எவ்விதத்திலும், ஒவ்வொரு கணத்திலும் மஹத்தானவராக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாந் என்று அழைக்கப்படுகிறார். 

அத்ருத: - அனைத்தையும் உள் நின்றும், தம்முள் நிலைபெறுத்தியும் தாங்குபவர் ஆகையாலே தம்மைத் தாங்கும் எதுவும் இல்லாததால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வத்ருத: - எதனாலும் தாங்கப்படாமல், தாம் அனைத்தையும் தாங்குபவராய் இருப்பதோடு மட்டுமன்றித் தம்மைத் தாமே தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வாஸ்ய: - அன்றலர்ந்த செவ்வி மாறாது எக்கணமும் இயல்புற மிளிரும் ஆனந்தத்தில் நிலைத்த இருப்பை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வாஸ்யர் எனப்படுகிறார். 

ப்ராக்வம்ச: - என்றும் பிற்பட்டதாக ஆகிவிடாமல் புதியதாகவே இருக்கின்ற நித்யமான தன்மையாலும், நித்யசூரிகள் என்னும் வம்சத்திற்கும் முந்தையரும் பெரியவரும் ஆனவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ராக்வம்சர் எனப்படுகிறார். 

வம்சவர்த்தந: - தம் வம்சமாகிய பிரபஞ்சத்தையும் நித்ய சூரிகளின் திரள் வதியும் திருநாட்டையும் பெருகி வளரச் செய்து கொண்டேயிருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வம்சவர்த்தநர் என்று சொல்லப்படுகிறார். 

***

No comments:

Post a Comment