Sunday, October 24, 2021

How To Love INFINITY?

ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம், ஆயிரம் நாமங்களால் நமஸ்காரம் செய்யும் நாமாவளி. புஷ்பங்கள் இட்டு அர்ச்சிக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை, இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன? நாம் யார்? அவன் யார்? இந்த இரண்டுதானே. அவன் என்றால் ஏதோ நம்மைப் போல் ஓர் ஆளில்லை என்பது தெரிகிறது. அதாவது பிறந்து வளர்ந்து உருவம் மாறி பெருத்து இளைத்து அதெல்லாம் உடைய ஓர் ஆள் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஓர் ஆள் இருக்க முடியுமா? ஏதோ காயகல்பம் அது இதுன்னு கதைகள் உண்டே அன்றி, அங்கும் நீண்ட நாள் இருக்கலாம் என்றுதான் கதை, அப்புறம் முதுமை, மரணம் என்று இயற்கை முந்திக்கொள்ளும் என்றுதான். எப்படிப் பார்த்தாலும் பல அங்கங்கள் ஒருங்கிணைந்து ஓருடல், ஓருருவம் என்றால் அதெல்லாம் ஒருநாளில் மறைந்துதான் ஆகவேண்டும். 

வேதாந்த தேசிகர் பாடுகிறார் - எல்லா தேவர்களும் கர்மச் சங்கிலியில் பூட்டியபடி ரோல்பரேடில் நிற்கிறார்கள். காலம் நியதி இரண்டும் அவர் அவர்கள் அந்தஸ்துக்குத் தக்கபடி வரிசையில் நிறுத்தியிருக்கிறது. மிக நீண்ட நாள் வாழும் தேவன் முன்னாடி நிற்கிறான். மிகக் குறுகிய வாழ்நாள் உடைய ஜந்து பின்னால் நிற்கிறது. மிகத் தள்ளி வரிசையில் நிற்கும் மனிதர் முன்னால் நிற்கும் தேவர்களிடம் தங்கள் கர்மத் தளையை அவிழ்த்துவிடுமாறு கெஞ்சிக் கையை நீட்டினால், அவர்கள் தங்கள் கைகளைப் பதிலுக்குக் காட்டுகின்றனர். வரிசையில் நிற்பவர் ஒருவருக்கொருவர் எங்கே விடுவித்துக் கொள்வது? சுதந்திரமான தத்துவம் எதுவோ அதுவன்றோ விடுவிக்கவல்லது. 

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிறார் -- முக்குணங்களும் தளைகள்தாம். சத்வம் அதில் கொஞ்சம் நல்ல தளை. அவ்வளவுதான். ஒரு காடு. மனிதன் ஒருவன் மூன்று திருடர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டான். ஒருவன், 'ஏய் இவனைக் கொன்று போட்டு இவன் பொருட்களைக் கவர்வோம்' என்கிறான். அவன் தமோகுணம். இன்னொருவன், 'ஏய் இவனைக் கொல்வதால் நமக்கு என்ன லாபம்? கட்டிப் போட்டுவிட்டுக் கவர்வோம். இவனால் போலீசுக்குத் தெரிவிகக முடியாது' என்கிறான். அவன் ரஜோகுணம். மூன்றாமவனோ கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து, 'ஐயோ பாவம், இப்படியே நீ இங்கே கிடந்தால் ஏதாவது மிருகங்கள் வந்து அடித்துவிடும். பாவம் நீ ஏன் சாக வேண்டும்? வா காட்டின் எல்லை வரையில் வந்து உன்னை நகரத்துக்குள் போக வழிகாட்டிவிட்டுச் செல்கிறேன்' என்று அவிழ்த்துவிட்டு அழைத்துச் செல்கிறான். அவன் சத்வகுணம். ஆனால் எல்லைக்கு வந்ததும் மனிதன் நன்றிப் பெருக்கால், 'அண்ணே! வாங்க வந்து ஒருவாய் காப்பித் தண்ணி குடித்துவிட்டுப் போங்க' என்று அழைக்கிறான். அந்த மூன்றாமவனோ, 'ஐயய்யோ! நான் நகரத்துள் வரமுடியாதப்பா! நான் மாட்டிக்கொள்வேன். போய்வா' என்கிறான். சத்வ குணம் நல்லவன். ஆனால் அவனும் திருடனே. சமுதாயத்தில் நடமாட முடியாது. அதுபோல் முக்குணங்களும் பிரம்மத்திடம் அண்ட முடியாது. ஏதோ சத்வ குணம் பிரம்மத்தை நோக்கி வழிகாட்டும். அம்மட்டே. 

வேதம் முழுதும் மூன்று குணங்களை விஷயமாகக் கொண்டது அர்ச்சுனா! நீயோ மூன்று குணங்களும் கடந்தவனாக இரு - என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில். அவனே சொல்கிறான் - மூன்று குணங்களால் ஆன என் மாயையானது கடத்தற்கரியது அர்ச்சுனா. யாராலும் தங்கள் தங்கள் முயற்சியால் கடந்துவிட முடியாது. என்னையே சரணடைகிறவன் எவனோ அவன் இந்த முக்குணங்களைக் கடந்தவனாக ஆகிறான். 

ஆக ஒன்று தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணன் என்பது ஓர் ஆளில்லை நம்மைப் போல், ஏன் யாரையும் போல். அவன் சரி இந்த உலகில் இயங்கும் எவ்வளவோ தத்துவங்கள் போன்று ஒரு தத்துவமோ என்றால் அதுவும் இல்லை. சரி ஏதாவது பெரிய ஜோதி உருவமா என்றால் அப்படியும் இல்லை. இல்லை பெரிய ஸ்தானமா நிலையா ம் ம் இல்லை. 

இதனைத்தையும் உள்ளடக்கிய முழுமை. இந்தத் தத்துவங்களோடு எல்லாம் ஒன்றாக வைத்து எண்ண முடியாத பரம தத்துவம். 

இந்த ஜோதிகள் இவற்றோடு எல்லாம் வைத்து நினைக்க முடியாத பரம ஜோதி. 

இந்த நிலை அந்த நிலை என்று அழிவுறும் நிலைகள் எதிலும் வைத்து எண்ண முடியாத பரம தாமம், நிலை. 

அத்தனையையும் தனக்கு உடலாகவும், தான் அனைத்தினுள்ளும் ஒன்றாகிக் கலந்து உயிராகி நிறைந்து நிற்பதால் பரம ஆத்மா. 

இப்படிச் சொன்னால் எப்படி சார் நினைத்துப் பார்ப்பது? அதனால்தான் அசிந்த்யன். 

பகுதி படாத முழுமை. அதனால்தான் அவ்யயன். 

ஆனாலும் அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு, நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம். 

அவனுடைய பாதங்கள் இந்தப் பூமி. 

விண்ணுலகம் அவன் சிரம். 

இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி. 

ஞாயிறு அவன் கண். 

வாயு அவன் நாசி. 

திசைகள் அவன் செவிகள். 

சந்திரன் அவன் மனம். 

மாயை அவன் முறுவல் 

மரங்கள் அவன் ரோமங்கள் 

மேகங்கள் அவன் குழல் கற்றை 

அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம்
சுத்த ஜீவ சைதன்யம் 

இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள். 

ஜீவர்களின் கூட்டத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம் 

வனமாலை மாயையின் விசித்ர குணங்கள் 

அவனுடைய மஞ்சள் ஆடை வேதம் 

அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம். 

அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம். 

அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம் 

பிராணன் கதையாகிய கௌமோதகி 

அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம் 

அக்னி தத்துவம் சுதர்சனம் 

அதாவது என்னவென்றால் முழுமைக்கு உருவம் தந்து தந்து இந்த மனம் தோல்வி அடைவதுதான் இதன் வெற்றி. ஏனெனில் உருவம் தந்து இந்த மனம் வென்றுவிட்டால் அப்பொழுது அது தோல்வி. மனத்தால் கிரஹிக்கக் கூடிய எதுவும் பரம் தத்துவமாக ஆகிவிடமுடியாது. ஆனாலும் உருவம் தராமல் மனம் ஒன்றை மனம் கொள்ள முடியாது. எனவேதான் தேர்வு பெற பரிட்சை எழுதாமல் தோல்வி அடைய பரிட்சை எழுதவைக்கின்றன தியான ச்லோகங்கள். நினைத்துப் பார்த்து மனத்தில் வாங்க முயன்று அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது. வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது. ஆனால் இந்தப் 'பெரும் புறக்கடலில்', 'கிருபா சமுத்திரத்தில்' அமிழ்ந்து போனால் தான் வாழ்வு. அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள். 

ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனை ஒரு முறை ஒரு கேள்வி கேட்டார். 'அப்பா! நீ சச்சிதாநதமாகிய ரஸம் ஊற்றிய ஒரு பாத்திரத்தின் விளிம்பில் ஒரு தேனியாக உட்கார்ந்திருக்கிறாய். எப்படி அந்தத் தேன் ரஸத்தை அருந்துவாய்?' 

ஜாக்கிரதையாக விளிம்பில் கெட்டியாக ஊன்றியபடித் துருத்தியை நீட்டி நீட்டி அருந்துவேன். 

ஏன்? 

ஆம். தவறினால் அதற்குள் விழுந்து இறக்க நேரிடுமே! 

அடடா! குழந்தாய்! இது பிறப்பு இறப்பு என்பதையே நீக்கும் அமிர்தக் கடல் ஆயிற்றே! நீ எதற்குப் பயப்பட வேண்டும்? இதற்குள் ஆழ்ந்து அமிழ்ந்தால் என்ன? அமிழ்ந்து போகப் போக நித்யத்வம் அன்றோ? மரணம் அன்றோ மறைந்து போகும். 

அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால் ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம். 

தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச 

தியானம் செய், தோற்றுப் போ! 

துதி செய், தோற்றுப் போ! 

அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! 

அதுதான் நமஸ்காரம். 



How To Love INFINITY?

நீங்கள் INFINITYஐ காதல் செய்து பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதுதான் ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்வது என்பது. எல்லாவிதத்திலும் அநந்தம். இடத்தால் எல்லைப் படாத அநந்தம். காலத்தால் எல்லைப் படாத அநந்தம். பொருளால் எல்லைப்படாத அநந்தம். புரியவில்லை. எப்படி இத்தகைய ஓர் வஸ்துவைக் காதல் செய்வது? எனவேதான் பரவஸ்து. 

கூகிள் மேப்பில் காட்டுகிறார்கள். சும்மா பத்தாயிரம் கணக்கில் ஒரு பெருக்கம் போனாலே பூமியே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அவ்வளவு பொடியாய். அந்தப் பொடியில் எங்கோ எங்கோ பொடி நுண் நுனிக் கோண் கூறின் சதத்தில் ஒன்று. நாம் அநந்தத்தை, இன்ஃபினிடியைக் காதல் செய்வது என்று நினைத்துப் பாருங்கள். ஆனாலும் அந்த அநந்தம், அந்தப் பராத்பரம், அந்தப் பரவஸ்து, அந்தப் பரம ஆத்மா தன்னை இந்த அணு பரிமாணம் உள்ள ஜீவன் நினைக்கவும், காணவும், பூஜிக்கவும், ஸ்தோத்திரம் செய்யவும் ஆகலாம்படி அவனுக்கு எந்த எந்த உருவம் பிடிக்கிறதோ அந்த உருவத்தில் எல்லாம் தன்னை எல்லைக்கு உட்பட்டது போல் ஒரு மாயையை ஆக்கிக்கொண்டு வந்து இவன் முன் நிற்கிறதே! இது என்ன இது என்ன இது என்ன என்று மூர்ச்சை ஆகிறார் பீஷ்மர். 

அந்த அநந்தம், அந்தப் பரம்பொருள், எல்லையற்ற பராபர வஸ்து இப்படி ஓர் ஆய்ச்சிக் கை வெண்ணைக்கு அழுவதும் இதழ் நெளிப்பதுமாய் இருந்து ஏங்கி நின்ற எளிவே என்று நினைத்தார் நம்மாழ்வார். ஆறுமாச காலம் அப்படியே மூச்சுப் பேச்சின்றி மோகித்துக் கிடந்தார். இந்தப் பகுதியை கூரேசர் எடுத்து விளக்க ஆரம்பித்தார். 'ஆழ்வாருக்கு ஓடுகின்ற பா4வம் அறியாதே நாம் யார் இருந்து இதற்குப் பாசுரம் இடுவது!' என்று காலாழ்ந்தார் நெஞ்சாழ்ந்தார் கண் சுழன்றார், கண்ண நீர் வார 'இன்று இத்துடன் விட்டால் ஆகாதோ!' என்று அதிலேயே பரவசமாகிக் கிடந்தார். எழுந்து சென்ற வைணவர்கள் எம்பெருமானாரிடம் சென்றார்கள். எம்பெருமானாரோ காத்துக் கிடக்கிறார். 'என்ன சொன்னார் கூரேசர் இன்றைக்கு?' இந்த இடம் வந்தவாறே பரவசமானார், 'ஆழ்வார்க்கு ஓடுகின்ற பாவம் அறியாதே நாம் யார் இருந்து இதற்கு என்ன பாசுரம் இடுவது' என்று பேச்சோய்ந்தார், கண்ணீர் அளறில் ஆழ்ந்தார் என்றார்கள். அதற்கு எம்பெருமானார், 'என்ன பரம சேதநனோ! என்ன பரம சேதநனோ, ஆழ்வான்!' என்றார். அதுமுதல் கூரத்தாழ்வான் என்றே பக்த குலம் குலாவத் தொடங்கியது. 

'அவ்வளவு பெரியவன் கிடீர்! நம்முன்னே இவ்வளவு எளியனாய் ஏவின செய்யும் சேவகனாய், தூது போ என்றால் ஓலை கட்டிக்கொண்டு தூது போவான் ஒருவனாய் நிற்கிறான் இந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!' என்று சொல்ல வருகிறார் பீஷ்மர். சொல்ல முடியவில்லை. நெஞ்சடைக்கிறது. அப்பொழுதே பிராணன் பிரிந்துவிடுமோ என்று பயம் பிடிக்கிறது. 

அற்புதமான கவிதை. சௌந்தர்யமெல்லாம் சிமிழ்ப்புறப் பெய்த சொற்கள். அநந்தம் என்பது உருவம் கொண்டது போல் உயிர்கள் முன் நடிக்கும் என்றால், அந்தச் சாகசத்தையும் சொல்லாடித் தோற்கின்ற வெற்றி இந்தக் கவிதை - தியான ச்லோகம். 

பாலால் ஆகிய பெருங்கடல். ஏன் பால்? பால் என்பது ஜீவ ரசம். 

பாற்கடலின் கரை எதனால் ஆனது? 

தூய ரத்தினங்கள் வில் எறியும் சுடர் பரப்புதான் கரைமணல். 

முத்துமாலைகளால் ஆகிய ஆசனம். ஸ்படிக மணி போன்று பளிங்கிடும் முத்துகளால் ஆனவையோ அவர் அங்கங்கள்? 

ஆசனத்தின் மேலே விதானமிடும் மேகங்கள் தாம் கர்ப்பம் சுமந்த அமுதத்தை அவ்வப்பொழுது பிலிற்றும் சாரல். 

சங்கம் ஒருகை, சக்கரம் ஒருகை, கதை ஒருகை, லீலா பதுமம் ஒருகையில். அந்த முகுந்தன்! 

அடுத்த ச்லோகம் இந்தச் சித்திரத்தைப் பெரும் புதிர் வியப்பாக ஆக்குகிறது. உங்கள் கற்பனையைக் கட்டி அதில் உங்களை ஏற்றிப் பின் அதை உடைத்துக் கற்பனாதீதமான அநந்தத்தின் முற்றத்தில், அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம், அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா? 

அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள்,
நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய
இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன். 

அந்தப் பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம் 

எப்படி இந்த விராட் சொரூபத்தை மனத்தில் வாங்குவது? கவிதையாக்கிப் பார்த்தாலும் கற்பனையின் கீல்கள் உடைந்து போகின்றன. அந்தத் தோல்வியைக் கண்டு பரம கருணை ஏற்படுகிறது அந்த எல்லையற்று எல்லையற்று எல்லையற்றதான் ஒன்றில். தூய்மையான யோகிகளின் இதயத்தில் பரம தயையால் நாம் புரிந்துகொள்ள வேண்டி, அஃது ஓர் உருவம் கொள்கிறது. 

சாந்தமான வடிவு
அரவணைமேல் சயனம்
நாபியில் மலர்ந்த தாமரை
தேவர்களுக்கெல்லாம் நாயகன்
உலகின் ஆதாரம்
ககனமாகிய ஆகாயத்தைப் போன்ற தன்மை
மேகம் போன்ற நிறம்
திருவின் கேள்வன்
அந்தக் கேண்மையால்
கமலமென மலர்ந்த கண்கள்
யோகிகளின் உளத்தே
தியானத்தால் புலப்படும் அருள்
பவ பயத்தைப் போக்கும் அபயம்
ஸர்வ லோகங்களுக்கும் ஏக நாதன்
அந்த விஷ்ணுவை என் ஆற்றாமையால்
வணங்கியவண்ணமே இருப்பன் யான். 

கார்மேகமன்ன மேனி
மஞ்சள் பட்டில் ஆடை
திருமறு மார்வம்
உயிர்க்குல மணி விடுசுடரால்
ஒளிர்தரு அங்கங்கள்
முளரி அலர்ந்தன்ன
விரிந்த கண்கள்
புண்ணியர் புடைசூழ் சுற்றம்
உலகனைத்துக்கும் ஒரே நாதன்
விஷ்ணுவை வந்தித்து உவப்பேன் 

(பொருளனைத்துக்கும் ஆதி
புவியைத் தாங்கும் பொறை
பல்லுருவம் கொண்ட பரிவு
பிரபுவான விஷ்ணுவிற்கு நமவே) 

கையன சங்கமும் நேமியும்
தலையன கிரீட குண்டலமும்
பொன்னாடையரையும்
பதுமநல் பார்வையும்
ஆரமார் மார்வம்
விளங்குயிர் மணியும்
நாற்கரம் திகழும்
விஷ்ணுவை வணங்குவன் தலையால். 

பாரிசாத தருநிழலும் பொன்னரிமாத் தவிசும்
கார்மேகவண்ணமும் கண்புடைபரந்த நோக்கும்
அணிதிகழ் இருக்கையும் திங்களேய்க்கு முகமும்
நாற்கரமும் திருமறுமார்வும் கொண்டு
ருக்மிணி சத்ய பாமையுடன் விளங்காநிற்கும்
ஸ்ரீகிருஷ்ணனைச் சரணம் எய்துகிறேன். 


இது ஏதோ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இருப்பது. பக்தர்கள் உவப்பது என்று மட்டுமன்று. சங்க காலப் புலவோர் மெய்மறந்து சொல் மறந்து வாய்வெருவி நிற்பது. நம்ப முடியவில்லையோ? இதோ - 

"ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, 

மாவுடை மலர் மார்பின்
(ஸ்ரீவத்ஸ வக்ஷ:)
மைஇல் வால் வளை மேனி
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய
வாய்வாங்கும் வளை நாஞ்சில்,
ஒரு குழை ஒருவனை; 

எரிமலர் சினைஇய கண்ணை;
பூவை விரிமலர் புரையும் மேனியை;
மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை;
(ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்)
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை;
(ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்) 

மால் வரை எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை;
சேவல் அம் கொடியோய்!
(கருட த்வஜா!)
நின் வலவயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும் 

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே." 

(பரிபாடலில் பகுதி, பிறைக்கோட்டினுள் வடமொழிப் பகுதி ஒப்பு நோக்க நான் கொடுத்தது) 

பீஷ்மன் பரவசத்தில் தியான நிஷ்டையில் ஆழ்ந்ததும், நம்மாழ்வார் ஆறுமாசம் மோகித்து மூச்சு பேச்சின்றிக் கிடந்ததும், சொல்ல வந்த கூரேசர் சொல்லொழிந்து கண்ணருவி இழியப் பரவசமானதும், பரிந்து பரமனைப் பரவும் பரிபாடலும் எந்த சேதநருக்காக என்று நினைக்கின்றீர்கள்? நமக்காக எல்லாம் நமக்காக.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment