Friday, October 29, 2021

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா

ஸுப்ரஸாத3: ப்ரஸந்நாத்மா விச்வத்4ருக் விச்வபு4க் விபு4: |
ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாது4ர்ஜஹ்நுர் நாராயணோ நர: ||


*

ஸுப்ரஸாத: - தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அநந்தமான பலன்களைத் தந்து மிக்க அருளைச் செய்கிறவர் ஆகையாலே ஸுப்ரஸாத:

ப்ரஸந்நாத்மா - வேண்டுதல் வேண்டாமை இலாததால் கலக்கம் அற்ற தன்மை கொண்டவர் ஆகையாலெ ப்ரஸந்நாத்மா

விச்வத்ருக் - (விச்வச்ருக்) - ஜீவர்கள் உய்வதற்காகவே சிருஷ்டியை உண்டாக்குபவர்; உலகத்தை அநாயாசமாகத் தாங்குபவர்;

விச்வபுக்விபு: - படைத்த உலகனைத்தையும் பிரளய காலத்தில் தம் திருவயிற்றில் வைத்து போஷிப்பவர். உலகங்களையெல்லாம் வியாபிப்பதன் மூலம் அவற்றைக் காப்பாற்றுபவர்.

ஸத்கர்த்தா - ஸாதுக்களை என்றும் பூஜிப்பவர்

ஸத்க்ருத: - சாதுக்கள் தம்மைப் பூஜிக்கும் இடத்து மிகச் சிறிய பொருளாயினும் பெரும் கௌரதையோடு அபிமானிப்பவர்.

ஸாது; - பக்தர்களின் ஏவல்களையெல்லாம் மிக்க ஆனந்தத்துடன் செய்பவர்.

ஜஹ்நு: - பக்தர்கள் அல்லாதார்க்குத் தம்மை முற்றிலும் மறைத்து விடுபவர்.


நாராயண: -

ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் -
1) நரன் என்னப்படும் ஆத்மாவினிடம் உண்டான நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய காரிய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்

2) நரர்கள் என்னும் ஜீவர்களுக்குப் பிரளயகாலத்தில் ஆதாரமாய் இருப்பவர்

3) நாரம் என்னப்படும் பிரளயஜலத்தில் சயனிப்பவர்

4) 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற சந்யாஸிகள் சம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம;' என்னும் இந்த சத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் சபதமிட்டுச் சொல்கிறேன்' என்று நரஸிம்ம புராணம் கூறுவதால் முக்கியத்துவம் நன்கு விளங்குவது நாராயண நாமம்.

ஸ்ரீபராசர பட்டர் -
அழியாத நித்ய வஸ்துக்களாகிய ஆத்மாக்களின் கூட்டத்திற்கு சேருமிடமாக, அந்தர்யாமியாக இருப்பவர் ஆகையாலே நாராயண;
*


நர: - சேதனம் அசேதனம் ஆகிய நித்ய வச்துக்களின் திரளை நடத்துபவர்.

No comments:

Post a Comment