Sunday, March 22, 2020

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை ஈர்த்ததும், பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவ்ய நாமங்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச் சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். ( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாமஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ - சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை - 

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை 

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.
*


ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்கப் பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (தமிழில் இந்த நூலைச் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்). 

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார். 

'ஒரு தடவை நீ அவன் நாமத்தைச் சொன்னால் பாபங்களின் குடியிருப்பில் சுனாமியே வந்துவிடுகிறது' என்கிறார் கபீர். 

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர். 

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல் பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும். 

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில்பட்ட உப்புபோல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்த நாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். 

" ஹரி என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான். 

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!' 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஞான புத்திரன் என்று கொண்டாடப்பட்ட சுவாமி பிரம்மாநந்தர் கூறுவது -- 

"Repeat his name and call upon him. He is very near and he is dear to all. Why should he not reveal himself? Open your heart to him. He will guide you along the right path. There is nothing more purifying than his name and meditation upon him. He is our very own. He easily becomes revealed to us." 

தாரக் மஹராஜ் என்னும் சுவாமி சிவாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யர். அவர் கூறுவது -- 

"It is people with gross ideas alone who think that the more one tells beads, the more propitious does God become. Does He really look at the number? He only watches how much the heart is dedicated to Him. If the proper divine mood prevails, what does it matter whether you keep count or not?" 

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம சாதனையில் நன்கு பழுத்த பெரும் மகான்கள். அவர்களில் சுவாமி அத்புதாநந்தர் என்னும் லாட்டு மஹராஜ் என்பவர் விசேஷமானவர். ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதம் இந்த லாட்டு மஹராஜ் என்பதாலேயே சுவாமி விவேகாநந்தர் இவருக்கு அத்புதாநந்தர் என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அத்புதாநந்தர் என்பவரை ஜப சித்தர் என்றே கூறலாம். இவரை ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் படிப்பறிவில் மிகவும் கற்றவர் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாட்டு படிப்பறிவு சிறிதும் இல்லாதவர். ஆனால் ஆன்ம சாதனையினாலும், குருவின் பேரருளாலும் லாட்டு மஹராஜ் அடைந்த ஆன்மிகப் பெருநிலை சொல்லும் அளவன்று. அவர் ஜபத்தைப் பற்றிக் கூறும் கருத்து -- 

"Sri Ramakrishna used to say that before starting to chant the name of the Lord, one should salute the name. One should take refuge in the name of the Lord. The name and the named, that is, the Lord, are one." 

நாம மஹிமையைப் பற்றி அதை அனுஷ்டித்தவர்கள் சொன்னவற்றைத் தொகுத்தாலே பல பெரிய நூல் அளவிற்கு வந்துவிடும். நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***


No comments:

Post a Comment