Sunday, March 22, 2020

ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந் நாம விளக்கம்

பகவந் நாமங்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் சொல்லி அதைத்தான் படித்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணனே தன்னுடைய ரகஸ்யமான நாமங்களுக்கு என்ன பொருள் என்று அர்ஜுனனுக்கு விளக்குவதை ஸ்ரீ மஹாபாரதம், சாந்தி பர்வம் பதிவு பண்ணி வைத்திருக்கிறது. இதைக் கிட்டத்தட்ட ஸ்ரீ கிருஷ்ணன் எழுதிய உரை என்றே கொள்ளலாம் போல இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னது -

ஓ! பாரதனே! முக்காலத்திலிமுள்ள எல்லாருக்குமே விஷ்ணுவானவர் தலைவர். வணங்கப்படத் தக்கவர். பூசிக்கப்படத் தக்கவர். குந்தி புத்திரனே! புகல் அளிப்பவரும், வரம் அளிப்பவருமான விஷ்ணுவை நமஸ்காரம் செய்; வணங்கு. துயரடைந்தவன், ஞானத்தை விரும்புபவன், பொருளை விரும்புபவன், ஞானி ஆகிய நால்வரும் என்னுடைய பக்தர்களே. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களும் என்னையே வணங்குகிறார்கள், விருப்பத்தை விட்டு, கர்மங்களைக் கர்ம யோகமாகச் செய்யும் ஞானிகளுக்கு நானே கதி. பயனை விரும்பும் பக்தர்களுக்குப் பலனானது அழிவுடையது. ஆனால் என்னையே விரும்பும் பக்தர்களின் பலனோ அழியாதது. ஞானி மிகச்சிறந்த முக்தியை அடைகிறான். ஞானத்துடன் கூடிய அனுஷ்டானம் உடையவர்கள் பிரம்மாவையோ, ஈசவரரையோ மற்றத் தேவர்களையோ தொழுதாலும் என்னையே பயனாக அடைவார்கள். ஓ! பார்த்தனே! பக்தர்களைப் பற்றிய இந்தச் சிறப்பானது உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! குந்திபுத்திரா! நீயும் நானும் நர நாராயணர்களாகக் கருதப்பட்டவர்கள். பூபாரத்தைத் தொலைப்பதற்காக மனுஷ்ய சரீரத்தில் பிரவேசித்தோம்.

ஓ! பாரதனே! ஆத்மாவைப் பற்றிய யோகங்களை அறிகிறவனும், நிவிருத்தி ரூபமான வளர்ச்சியைச் செய்கின்றவனும், என்றும் இருப்பவனான நான் ஒருவனுமே நரர்களுக்குப் பிரசித்தமான ஸ்தானம். அப்புக்கள் நரனிடமிருந்து உண்டாயின. ஆகையால் அப்புக்கள் நாரங்கள் என்று சொல்லப்படுகின்றன. முதன்முன்னம் அவை எனக்கு ஸ்தானமாயின. எனவே எனக்குப் பெயர் நாராயணன்.

நான் எல்லாமுமாகி சூர்யன் கிரணங்களால் மறைப்பது போல் மறைக்கிறேன். அதனாலும் அனைத்து உயிர்களுக்கும் வசிக்கும் இடமாக நான் இருப்பதால் எனக்குப் பெயர் வாசுதேவன்.

ஓ! பாரதனே! எல்லாப் பிராணிகளுக்கும் அடங்கும் இடமாகவும், உற்பத்தி ஆகும் இடமாகவும் நான் இருக்கிறேன். என்னால் ஆகாயமும், பூமியும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய காந்தி மிகப்பெரியது. பூதங்களில் பிரவேசித்து ஜகத்தாய் இருக்கிறேன். எங்கும் பரந்து நீக்கமற நிற்கிறேன். எனவே என் பெயர் விஷ்ணு.

இந்திரியங்களை அடக்கித் தவம் செய்வோர் பலர். அவர்களில் சிலர் தேவ லோகத்தை அடைய விரும்புகின்றனர். சிலர் பூமியில் சிறந்த நிலையை விரும்புகின்றனர். சிலர் உயர்ந்த நிலைகளை அடைய விரும்புகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் எண்ணம் பூர்த்தி அடைய வேண்டி என்னை விரும்புகின்றார்கள். அதனால் என் பெயர் தாமோதரன்.

அன்னம், வேதங்கள், ஜலம், அமிருதம் இவையிற்றுக்கு ப்ருச்னி என்று பெயர். அவைகளை எப்பொழுதும் நான் என்னுள் சுமப்பதால் எனக்கு ப்ருச்னி கர்ப்பன் என்று பெயர்.

உலகங்களைத் தபிக்கச் செய்கின்ற சூர்யன், அக்னி, சந்திரன் இவர்களுடைய கிரணங்கள் பிரகாசிக்கின்றன. இவைகள் என்னுடைய கேசங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆகையால் என்னுடைய பெயர் கேசவன்.

சூர்யனும், சந்திரனும் கிரணங்கள் என்று பெயர் கொண்ட என்னுடைய கேசங்களாலே உலகத்தை அடிக்கடி விழிக்கச் செய்தும், தபிக்கச் செய்தும் தனித்தனியாக கிளம்புகிறார்கள். போதிப்பதனாலும், தபிக்கச் செய்வதனாலும் உலகத்திற்குச் சந்தோஷம் ஏற்படும். ஓ! பாண்டு புத்திரனே! சூரியனாலும், சந்திரனாலும், அக்னியாலும் செய்யப்படும் இந்தக் கர்மங்களால் ஈசானனும், வரமளிப்பவனும் உலகங்களை உண்டு பண்ணுகிறவனுமான எனக்கு ஹ்ருஷீகேசன் என்று பெயர்.

நான் வீடுகளில் நடக்கும் யாகங்களில், 'இலோபஹூத' என்கிற மந்திரத்தினால் அழைக்கப்பட்டுப் பாகத்தை 'ஹரிக்கிறேன்', உள்வாங்குகிறேன். அப்பொழுது என்னுடைய நிறமும் ஹரித வர்ணமானது. எனவே எனக்குப் பெயர் ஹரி.

தாம என்றால் உலகங்களின் சாரமான பகுதி. விசாரிக்கப்பட்ட உண்மை எதுவோ அது ரிதம். எனவேதான் என் பெயர் ரிததாமா என்பது.

முன் காலத்தில், பூமியானது ஜலத்தில் முழுவதும் முழுகிப் போய், ஜலத்தின் குகை என்பதனுள் சென்று மறைந்தது. அவ்வாறு மறைந்த பூமியாகிய 'கோ'வை நான் தேடி அடைந்தேன் என்ற காரணத்தால் என் பெயர் கோவிந்தன்.

அவயவங்கள் அற்றவன் என்பதனால் எங்கும் உள்புகுந்து பிரவேசிப்பவன். அதன் காரணமாக எனக்குச் சிபி ஆவிஷ்டன் என்ற காரணத்தால் சிபிவிஷ்டன் என்ற பெயர் வந்தது. யாஸ்கர் என்ற முனிவர் இந்த நாமத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல யாகங்களிலும் சிபிவிஷ்டன் என்றே யாகம் செய்தார். அவர் அவ்வாறு சிபிவிஷ்டன் என்று ஜபித்ததால் அவருக்கு மறைந்து போன நிருக்தம் என்ற வேதச் சொற்களை ஆய்கின்ற நூல் மீண்டும் கிடைத்தது.

எல்லாப் பிராணிகளுக்கும் க்ஷேத்திரஜ்ஞன், அதாவது உணர்வு உருவாக இருப்பவன் நான். எனவே ஒரு பொழுதும் நான் பிறப்பவனுமில்லை, பிறந்தவனுமில்லை, பிறக்கின்றவனுமில்லை. எனவே என் பெயர் அஜன் - பிறவாதவன் என்பதாகும்.

குந்தியின் புத்திரா! அற்பமானவையும், அமங்களமானவையும் என்னால் ஒரு பொழுதும் சொல்லப்பட்டதில்லை. என்னுடைய வாக் சக்தி என்றும் தவறானது இல்லை. உண்மையானதும் ஆகும். கண்ணுக்குப் புலப்படும் மண், நீர், தீ ஆகிய மூன்றும், கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஆகாயம் ஆகிய இரண்டும் ஸத் - உள்ளதாக என் நாபி கமலத்தில் வைக்கப்பட்டமையாலும் என் பெயர் சத்யன்.

தனஞ்சயா! ஸத்வ குணத்திலிருந்து நான் ஒரு நாளும் நழுவாதவன். முன்னர் எப்பொழுதும் நழுவியதும் இல்லை. ஸத்வம் என்பதே என்னால் செய்யப்பட்டது என்னும் அளவிற்கு எனக்கு மிகவும் அணியானது. நான் எவ்வளவு ஜன்மம் எடுத்தாலும் சரி, ஸத்வ குணம் என்பது என்னிடம் கிஞ்சித்தும் மாறுவது கூட இல்லை. காரணம் என் ஜன்மங்கள் கிருபையின் காரணமாக ஏற்படுவன. கர்மத்தின் காரணமாக இல்லை. எப்பொழுதும் நிறைந்த ஸத்வ குணம் உடைமையால் என்னிடம் தோன்றும் கர்மங்கள் அனைத்தும் நிஷ்காம கர்மங்களே அன்றி வேறு எதுவும் கிடையாது. எப்பொழுதும் நிஷ்காமனாய் இருப்பதால் என்னைச் சதா களங்கம் அற்றவன் என்று அறிவாயாக. என்னைப் பிரம்மத்தை அறிந்தவர்கள் பார்க்கிறார்கள். மற்றவர்களால் நான் பார்க்கப்படுவதில்லை. பிரம்ம வித்துக்களும் என்னைக் காண்பது எப்படி என்றால் ஸாத்வதம் என்கிற பாஞ்சராத்திர சாத்திரத்தால் உண்டான ஞானத்தினால் பார்க்கிறார்களே அன்றி வேறு விதத்தால் அன்று. மேற் சொன்ன காரணங்களால் எனக்குப் பெயரே ஸாத்வதன் என்பதாகும்.

ஓ பார்த்தா! அர்ஜுனா! நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவாக ஆகி பூமியைக் கீறுகிறேன், அதாவது கர்ஷணம் செய்கிறேன். என்னுடைய நிறமோ கார்வண்ணம். எனவே எனக்குப் பெயர் கிருஷ்ணன் என்பதாகும்.

நான் நீரையும், பூமியையும் சேர்த்தேன். வாயுவையும் ஆகாயத்தையும் சேர்த்தேன். நெருப்பையும், வாயுவையும் சேர்த்தேன். அதனால் விரியாமல் மடங்குதல் என்பது, அதாவது குண்டம் என்பது என்னிடம் இல்லாத ஒன்றாக அறியப்பட்டது. குண்டம் அற்றவன், மடங்குதல் அற்றவன் என்ற காரணத்தால் (வி+குண்ட) வைகுண்டன் என்பது என்னுடைய பெயராக ஆனது.

அமைதியே உருவான பிரம்மமே மேலானது. அதைப் போன்று உலகில் அனைத்தையும் தாங்கும் தத்துவமான தர்மம் என்பதும் மேலானது. பரம் என்று இவை சொல்லப்படுகின்றன. நான் அந்தப் பரத்திலிருந்து நழுவாதவன் ஆகையாலே என்னுடைய பெயர் அச்சுதன் ஆகும்.

பிருதிவியாகிய உலகமும், ஆகாயமும் எங்கும் வியாபித்தவை. எனவே அனைவராலும் அறியப்படும் அளவிற்குப் பிரசித்தமானவை. அவைகளைச் சேர்த்து நான் தரித்திருக்கும் காரணத்தால் நிரூபணத்துடன் சொல்கிறார்கள் என்னை அதோக்ஷஜன் என்று. அப்படி அதோக்ஷஜன் என்றே என்னை வேதங்களை அறிந்தவர்களும், வேதங்களின் அர்த்தங்களை விசாரிக்கின்றவர்களும் யாக சாலையில் சிறப்பான ஓர் இடமான பிராக்வம்சம் என்னும் ஸ்தானத்தில் என்னை அதோக்ஷஜன் என்றே கானம் செய்கிறார்கள். அதனாலும் நானே அதோக்ஷஜன் என்று அறிந்து கொள்ளலாம். பரம ரிஷிகள் ஒரே குரலில் கூறியதாவது, 'பிரபுவான நாராயணரைத் தவிர உலகில் வேறு அதோக்ஷஜன் இல்லை' என்பதாகும்.

உலகத்தில் அக்னியின் ஜ்வாலை என் உருவம் ஆகும். அந்த ஜ்வாலையில் சேர்ந்த கிருதம், (செயல் அல்லது செயலுக்குக் குறியீடான நெய்) அந்தக் கிருதங்கள் பிராணிகளின் பிராணனைத் தரிக்கிறது. எனவே நன்கு கவனம் உள்ள வேத அறிஞர்களால் எனக்குக் கிருதார்ச்சிஸ், (கிருதங்கள் சேரும் அர்ச்சிஸ், அக்கினி) என்னும் பெயர் வழங்கப்பட்டது.

மூன்று தாதுக்கள் உயிர்களுக்குக் கர்மத்தால் உண்டாகின்றன. அவை பித்தம், சிலேஷ்மம், வாதம் என்று பிரசித்தமானவை. இவை சங்காதம், ஒன்று கூடியவை என்று சொல்லப்படுகின்றவை. இவைகளால் ஜந்துவானது தரிக்கப்படுகிறது. இவை குறைந்தால் ஜந்துவானது குறைவு அடைகிறது. அதனால் ஆயுர் வேதத்தை அறிந்தவர்கள் என்னை திரிதாது என்று அழைக்கிறார்கள்.

ஓ பாரதனே! விருஷம் என்பது நிகண்டுவின்படி பார்த்தால் 'பூஜ்யமான தர்மம்' என்று பொருள். என்னை மிக உயர்ந்த தர்மம் என்று அறிவாயாக. கபி என்றால் வராஹம் என்று பொருள். ஆதலால் கச்யபர் என்னும் சிருட்டி கர்த்தா என்னை விருஷாகபி என்று அழைத்தார்.

வேதத்தை அறிந்தவர்களும், தேவர்களும் என்னுடைய ஆதியையும், மத்யத்தையும், முடிவையும் ஒரு போதும் அறிகிறதில்லை. ஆகையால் ஆதி நடு முடிவு அற்றவன் ஆகிய என்னை, ஈசவரனும், உலகங்களின் சாக்ஷியுமான என்னை விபு என்று அழைக்கிறார்கள்.

ஓ தனஞ்சயா! சுத்தமானவைகளும், கேட்பதற்கு இனிமை உள்ளவைகளுமான வார்த்தைகளையே நான் இவ்வுலகில் கேட்கிறேன். பாவங்களை ஒரு போதும் கேட்பதில்லை. அதனால் என் பெயர் சுசிச்ரவஸ், தூய கேள்வியன் என்பதாகும்.

நான் முன்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய வராஹமாய்ப் பூமியை எடுத்ததால் என்னுடைய பெயர் 'ஏகச்ருங்கன்' என்பதாகும். வராஹ ரூபத்தை எடுத்த நான் உயர்ந்தவைகளான தோள், நாசிகை, தெற்றுப்பல் ஆகிய இம்மூன்றும் உயர எழுந்த நிலையில் இருந்ததால் த்ரிககுத் என்று அறியப்பட்டேன்.

ஞானத்தை விசாரிக்கும் அறிஞர்களால் நான் விரிஞ்சன், விசேஷமாய்த் தத்துவங்களை லயம் செய்கிறவன் என்று அறியப்பட்டேன். சேதனன் மூலமாக எல்லா உலகங்களையும் செய்கின்ற அந்த விரிஞ்சி ஆகிய பிரம்மாவும் நானே.

உறுதியான நிச்சயத்தையுடைய சாங்கியர்களான ஆசாரியர்கள், நான் வித்யையின் சகாயம் உள்ளவன் ஆகையாலும், ஆதித்ய மண்டலத்தில் இருப்பவன் ஆகையாலும், சநாதனனுமான என்னைக் 'கபிலன்' என்று அழைக்கிறார்கள்.

வேதத்தில் துதிக்கப்பெற்றவரும், எப்பொழுதும் யோகிகளால் பூஜிக்கப்படுகிறவரும், விபுவும், காந்தியுள்ளவருமான ஹிரண்யகர்ப்பரும் நானே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

5 comments:

  1. Sir, your deatailed explanation of Sri Vishnu Sahasranamam in simple Tamil language is highly commendable. I am sure that many people particularly youngsters will be greatly benefited. May Lord Vishnu bless all.

    ReplyDelete
    Replies
    1. Thankyou so much sid

      Delete
    2. Thank you so much. It's very easy to learn

      Delete
  2. Let all
    People benefit by reading
    Vishnu sahasranamam.

    ReplyDelete
  3. ஒரு ஆடியோ ஒலி வடிவமும் தர நலம்
    நன்றி

    ReplyDelete